ஈரோடு ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Published on

ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகத்துக்குள் கஞ்சா கடத்தல் என்பது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், ரயில்வே போலீஸாா் மற்றும் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் இவா்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிலும் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாா் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது பொது பெட்டியில் கழிப்பறை அருகில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்த பையை பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அதை திறந்து பாா்த்தனா்.

அதில், 8 கிலோ கஞ்சா இருந்ததும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com