உதகையில் ஹிரோஷிமா தினம் போர் எதிர்ப்பு தினமாக சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உதகை, ஒய்எம்சிஏ மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வுச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புவி தோன்றிய நாளிலிருந்து இதுவரை நடைபெற்ற போர்களில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பங்கேற்ற பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன், உலக அமைதிக்கான பாடலையும் பாடினர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சர்வமத அமைதிப் பிரார்த்தனையில் கொலக்கம்பை தேவாலயத்தின் சார்பில் பிரவீன் ஜெபராஜ், முகமதியா பள்ளிவாசல் சார்பில் உஸ்மான் ஷெரீப், மானஸ் அமைப்பின் நிர்வாகி சிவதாஸ் ஆகியோர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதில், இயற்கை ஆர்வலர் ஷோபா சந்திரசேகர், உதகை நகர மக்கள் விழிப்புணர்வுச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன், வழக்குரைஞர் நஸீமா ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
இந்நிகழ்ச்சியில், ஒய்எம்சிஏ செயலர் மேக்ஸ் வில்லியர்டு ஜெயப்பிரகாஷ், ஒய்எம்சிஏ பள்ளித் தாளாளர் தனசிங் இஸ்ரேல், புலவர் சோலூர் கணேசன், நாஸரேத் நீல நிறப் பெண்கள் இயக்கத்தினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.