உதகை, ஜல்லிக்குழி பகுதியில் இலவச குடிநீர் விநியோகத்தை மீண்டும் தொடர வேண்டும் எனக் கோரி, அப்பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மஞ்சனக்கொரை ஜல்லிக்குழி கடல் பூக்கள் மகளிர் சுயஉதவிக் குழுவின் சார்பில் உதகையில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உதகை நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஜல்லிக்குழி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் போக்குவரத்திற்கு இடையூறில்லாத இடத்திலேயே அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் தனது பட்டா நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகித்து வருகிறார். இதில் ஜல்லிக்குழி பகுதி மக்களுக்கும் இலவசமாகவே குடிநீர் விநியோகித்து வருகிறார்.
இதற்காக நகராட்சியில் உரிமம் பெற்று ஆண்டு வரியும் கட்டி வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் எடுப்பதற்கு தற்போது நகராட்சி நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு இதுவரை இலவசமாக கிடைத்து வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதால் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் இலவசமாக தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.