பாரதப் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என இத்திட்டத்திற்கான எச்பி நிறுவனத்தின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதகையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், வறுமைக் கோட்டுக்குள் இருக்கும் மக்களுக்கும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 15,000 குடும்பங்களுக்கு இலவச இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் 2,000 குடும்பத்தினருக்கு இலவச இணைப்பு வழங்கப்படவுள்ளன.
உதகையில் முள்ளிகூர், மேல்குந்தா, குன்னூர் பகுதிகள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளன என்றார். பேட்டியின்போது சமையல் எரிவாயு விநியோகஸ்தர் ஸ்ரீராம் உடனிருந்தார்.