உதகையில் 2013-ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
உதகை மின் வாரியத்தில் பணியாற்றி வந்தவர் ஆரோக்கியதாஸ் (52). இவர் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு ஆரோக்கியதாஸுக்கும், அருகில் உள்ள குடியிருப்பைச்சேர்ந்த நாகராஜ் (55), ஜெய்சங்கர் (35), கிருஷ்ணமூர்த்தி (35), பிரேமா (45) ஆகியோருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் ஆரோக்கியதாஸின் மகன் பிராங்க்ளின் (22), ஆரோக்கியதாஸின் சகோதரி மகன் அருள்தாஸ் ( 45)ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது நாகராஜ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கியதில் பிராங்க்ளின், அருள்தாஸ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் நாகராஜ், ஜெய்சங்கர், கிருஷ்ணமூர்த்தி, பிரேமா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி முரளிதரன் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம்சாட்டப்பட்ட நாகராஜ், ஜெய்சங்கர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிரேமா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்த வழக்கில் இரவு 10.30 மணி அளவில் நீதிபதி முரளிதரன் தீர்ப்பு வழங்கினார். நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இரவு நேரத்தில் தீர்ப்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று வழக்குரைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.