வாக்காளர் பட்டியல் திருத்தம்: 30ஆம் தேதி இறுதி நாள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எந்த மனுவும் பெறப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2019 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 
இதில், 31.12.2000க்கு முன்னர் பிறந்தவர்களும், 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருப்போரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம். 
 ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை பணியில் இருப்பர்.  அவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,  நீக்குதல், பிழை திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் குறித்து உரிய படிவங்களில், உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.  
இதுதொடர்பாக ஏற்கெனவே சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்  நடத்தப்பட்டிருப்பதுடன்,  இருப்பிட நலச் சங்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து நான்காவது கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை (அக்டோபர் 13) நடத்தப்படவுள்ளது. 
இதில், தங்களது பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து, 14ஆம் தேதி சிறப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது.  அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல்,  திருத்தம் செய்தல் உள்ளிட்ட எந்த மனுக்களும் பெறப்பட மாட்டாது. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும்  தகுதியுடைவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com