சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், "சபரிமலையைக் காப்போம்' என சபதம் எடுத்தும் உதகையில் ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டனப் பேரணி காவல் துறையின் எதிர்ப்பையும் மீறி சனிக்கிழமை நடைபெற்றது.
சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் "சபரிமலை புனிதத்தைக் காப்போம்' என வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் செல்ல மணிக்கூண்டு சாலை வரை மட்டுமே காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.
இதனால், பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, பேரணியில் சென்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதையடுத்து, பேரணியில் பங்கேற்றவர்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.
பின்னர், இந்தப் பேரணி கடைவீதி வழியாக ஐயப்பன் கோயிலைச் சென்றடைந்தது. பேரணியில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.