மாணவிக்கு பாலியல் தொல்லை: பக்கத்து வீட்டு இளைஞர் கைது
பழைய உதகைப் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பழைய உதகைப் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (40). இவரது பக்கத்து வீட்டில் 15 வயதான பள்ளி மாணவி தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவியின் தந்தை சென்னையில் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் பாலசுப்பிரமணி அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்து செல்வாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தபோது சென்ற பாலசுப்பிரமணி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்து அந்த மாணவி சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற சைல்டு லைன் அமைப்பினர் மாணவியை மீட்டனர்.
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.