நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறித்து மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பணியமர்த்தப்பட்ட வழிகாட்டு அலுவலர்களைக் கொண்டு அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் திருமண வீடுகளில் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், குன்னூரில் 2 உலிக்கல், ஜெகதளா, கீழ்குந்தாவில் தலா 1, கோத்தகிரியில் 3 என மொத்தம் 8 திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து ரூ. 55,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.