வியாழக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் உதகை நகரப் பகுதியிலும், திமுக வேட்பாளர் ஆ.ராசா உதகை அருகிலுள்ள சோலூர் பகுதியிலும், அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி கூடலூர் பகுதியிலும் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உதகை வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கடநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து அணிக்கொரை, எப்பநாடு, கக்குச்சி, கூக்கல்தொரை, தும்மனட்டி பகுதிகளில் பிரசாரத்தை முடித்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு தலைக்குந்தா பகுதியிலும், மாலை 4 மணிக்கு சோலூர் பகுதியிலும் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.