பந்தலூர் பகுதியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் குடியிருப்புகளின் கூரைகள் செவ்வாய்க்கிழமை மாலை காற்றில் பறந்தன. பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தன.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இதில், மேங்கோரேஞ்ச் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன.
இதில் ஒரே வரிசையிலிருந்து ஐந்து வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பந்தலூர், இந்திரா நகர், மேங்கோரேஞ்ச் போன்ற பகுதிகளில் வாழைத்தோட்டங்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மரங்கள் சாய்ந்தன: பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்தன.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரண்டாவது நாளாக அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.