குன்னூர் "டீசர்வ்' ஏலத்தில் ரூ. 2.51 கோடிக்கு தேயிலைத் தூள் ஏலம் போனது.
நீலகிரி கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள், குன்னூர் "டீசர்வ்' ஏல மையத்தில் பிரதி வாரம் புதன்கிழமை இணையவழியில் ஏலம் விடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 32வது ஏலத்தில், இலை ரகம், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 310 கிலோ, தூள் ரகம், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 722 கிலோ என மொத்தம், 3 லட்சத்து 55 ஆயிரத்து 32 கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது.
இது முந்தைய ஏலத்தை விட 6,621 கிலோ குறைவு.
இலை ரகம் 99.52 சதவீதமும், தூள் ரகம், 97.55 சதவீதமும் விற்பனையானது. கடந்த ஏலத்தை விட 3,653 கிலோ விற்பனை குறைந்தது. இது 98.63 சதவீத விற்பனையாகும்.
இலை ரகத்தில் குந்தா, சாலீஸ்பெரி, பந்தலூர் தொழிற்சாலைகளின் வரத்து அதிகமாக இருந்தது. தூள் ரகத்தில், சாலீஸ்பெரி தொழிற்சாலையில் 28,502 கிலோ வரத்து வந்து, 100 சதவீதம் விற்பனையானது. அதற்கு கிலோவுக்கு சராசரி விலை ரூ. 72.49 கிடைத்தது.
இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ. 2 கோடியே 51 லட்சத்து 43 ஆயிரத்து 60க்கு விற்பனையானது. மொத்த விற்பனையில் சராசரி விலை ரூ. 71.80 ஆக இருந்தது. சராசரி விலையில் ரூ. 1.76 குறைந்தது. இது கடந்த வாரத்தை விட, ரூ. 8 லட்சத்து 85 ஆயிரத்து 556 ரூபாய் மொத்த வருமானத்தில் குறைவாகும். இதனை வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.