நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்' தடை, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செப்டம்பர் 1ம்தேதி முதல் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
உதகையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15ஆம் தேதிமுதல் அனைத்து வகையான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடை உத்தரவை ஆகஸ்டு 15ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து, நீலகிரி மாவட்டத்தில் 300 மி.லி, அரை லிட்டர், ஒரு லிட்டர், 2 லிட்டர், 5 லிட்டர், 10 லிட்டர் வரையிலான எத்தகைய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் அனுமதியில்லை.
முதல்கட்டமாக அனைத்து மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்படும். நெடுஞ்சாலைப் பகுதிகளிலுள்ள எந்தக் கடைகளிலும் இத்தகைய குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது. சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் இவற்றைப் பயன்படுத்தவும் கூடாது.
அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் கேன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது கட்டமாக இத்தடை அனைத்து உணவகங்களுக்கும் அமல்படுத்தப்படும். அனைத்து உணவகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்களைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.