நீலகிரி மாவட்டம், மஞ்சூர்- உதகை சாலையில் போர்த்தி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
போர்த்தி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக மர்ம விலங்கின் கால்தடம் காணப்பட்டுள்ளது. மேலும், அந்த விலங்கு ஒரு மாட்டை அடித்துக் கொன்றுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, சிறுத்தை ஒன்று சாலையில் இருந்து வங்கி அருகே நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.