உதகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இம்மாதம் 30ஆம் தேதி, (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், இம்மாதம் 30ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு அட்டைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான 4 புகைப்படங்களுடன், அசல் குடும்ப அட்டை மற்றும் நகல், அசல் ஆதார் அட்டை மற்றும் நகல் ஆகியவற்றுடன் சிறப்பு முகாமில் பங்கேற்றுப் பயனடையலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் தங்களது கோரிக்கைகள், குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துப் பயனடையலாம்.
அத்துடன் ஆதார் அட்டை, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை எடுக்காத மாற்றுத் திறனாளிகளும் இம்முகாமில் பங்கேற்றுப் பயனடையலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.