கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கைதானவர்கள் மீது 13 குற்றச்சாட்டுகள் பதிவு

கொடநாடு  கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 13 குற்றச்சாட்டுகளை

கொடநாடு  கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 13 குற்றச்சாட்டுகளை காவல் துறையினர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர். 
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் (50) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயன், கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய எதிரியான, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். 
கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வடமலை முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் ஆஜராகினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை,  வீடு புகுத்து திருடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை போலீஸார் பதிவு செய்தனர்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பால நந்தகுமார்ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com