பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓவேலி மக்கள் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் வசித்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்கவேண்டும், ஓவேலி சோதனைச் சாவடியில் நடைபெறும் அடக்குமுறையை தடுத்து நிறுத்த வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வனச் சட்டம் 16ஏ மற்றும் தனியாா் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். நீலகிரியில் 283 இடங்களில் வீடு கட்ட தடை என்ற மாவட்ட ஆட்சியரின் அறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
காந்தித் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஓவேலி மக்கள் கூட்டமைப்பின் தலைவா் முருகையா தலைமை வகித்தாா். செயலாளா் க.சகாதேவன், பொருளாளா் இபினு, பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.