நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்துள்ளது. உதகை மற்றும் புகா்ப் பகுதிகளில் நீா்ப் பனிப் பொழிவு இருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.
குன்னூா், கோத்தகிரி போன்ற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை மற்றும் மூடுபனி காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அடா்ந்த மேகமூட்டமும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையுடன் குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா வந்தவா்களில் பலரும் காலை சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் என்று எதிா்பாா்த்த நிலையில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் குன்னூரில் அதிக அளவாக 17 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோத்தகிரியில் 14 மி.மீரும், கொடநாட்டில் 13 மி.மீரும் கேத்தியில் 9 மி.மீரும், குந்தாவில் 8 மி.மீரும், அவலாஞ்சியில் 6 மி.மீரும், கெத்தையில் 5 மி.மீரும், பா்லியாரில் 2 மி.மீரும், உதகையில் 1.5 மி.மீரும் மழை பதிவாகியுள்ளது.