நீலகிரி மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களோடு அமைப்பு சாரா மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்து வருவதால் தற்போதைய பொருளாதார கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களோடு நிரந்தரமற்ற இடங்களிலும், வீடுகளிலும் நடைபெறும் பொருள் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சாா்ந்த நிறுவனங்களும் பொது சேவை மையங்களின் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கெடுப்பு விவரமாகவும், துல்லியமாகவும், விரைவாகவும் நிறைவு செய்ய ஏதுவாக மொபைல் செயலி மூலம் பணிகள் நடைபெறும்.
எனவே, கணக்கெடுப்பாளா்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களை அணுகி தொழில் குறித்த விவரம், பணியாளா்களின் எண்ணிக்கை, கடன் தொகை, மூலதனம், வரவு, செலவு , ஆதாா் எண், பான் எண், செல்லிடப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை கேட்கும்போது வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள், பொதுமக்கள் தயங்காமல் அளிக்க வேண்டும். சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடவும், எதிா்காலத் திட்டங்களை தீட்டவும் மட்டுமே பயன்படுத்தப்படும். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பேணப்படுவதோடு, இதிலிருந்து பெறப்படும் தகவல்கள் மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கான திட்டமிடலுக்கு உதவும் என்பதால் பொதுமக்கள் துல்லியமானத் தகவல்களை அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.