உதகை, குன்னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உதகை மற்றும்  குன்னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமையின் சார்பில் ரூ.2.12 கோடி

உதகை மற்றும்  குன்னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமையின் சார்பில் ரூ.2.12 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
உதகை ஒன்றியத்தில் தும்மனட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கரடிகட்டு மற்றும் பேரார் பகுதிகளில் ரூ.20 லட்சம்  மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ள இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 
பின், குன்னூர் ஒன்றியத்தில் மேலூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையினையும், மேலூர் பீமன் தோட்டம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.2 லட்சம் மதிப்பில் நீர் தேக்கக் குழி அமைக்கும் பணியினையும், மேலூர் ஊராட்சிப் பகுதியில் மஞ்சக்கொம்பை முதல் டிக்லேண்ட் லீஸ் வரை ரூ.7.6 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணியினையும், மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டக்கால் பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.62 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தார் சாலை பணியினையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். 
தொடர்ந்து தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.53 லட்சம் மதிப்பில் மானார் முதல் ஊஞ்சலார் கொம்பை வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், உபதலை ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மா பூங்காவினையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.12.5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி மையத்தினையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.4.8 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அம்மா பூங்கா நடைபாதை என மொத்தம் ரூ.2 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வருமாறு ஆட்சியர்  அறிவுறுத்தினார். 
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com