குன்னூரில் பர்லியாறு ஊராட்சிக்குள்பட்ட சேம்புக்கரை பழங்குடியினர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தொலைதூரத்தில் உள்ள வளர்ச்சி குன்றிய கிராமங்களைக் கண்டறிந்து அவர்களின் அடிப்படைத் தேவைகளான நடைபாதை வசதி, மின்வசதி, குடிநீர், கழிப்பிடம் ஆகிய அனைத்தையும் செய்து தரப்படுகின்றன. பெண்கள் அனைவரும் குழுக்களாக சேர்ந்து கடனுதவி பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இந்த மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி உதவித் தொகையாக 9 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணையையும், 31 பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர் கீதாபிரியா, தனித்துணை ஆட்சியர் முருகன் ஆகியோருடன் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.