காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
குன்னூர் வனக் கோட்டத்தில் பர்லியாறு, குஞ்சப்பனை, ஆடர்லி, டைகர்ஹில், கொலக்கம்மை ஆகிய வனச் சரகங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இவை விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவது, குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து பொதுமக்களைத் தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. காட்டுயானைகள் இரவில் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிடுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் காணப்படுவதால் வனப் பகுதியில் செடி, கொடிகள் கருகி வருகின்றன. இதனால் யானைகள் உணவு தேடி வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே, காட்டுயானைகளுக்குப் பிடித்தமான வாழை, பலா மரங்களை பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வளர்க்க வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.