உதகையில் மீண்டும் அதிகரிக்கும் குளிர்:  குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸாக பதிவு

உதகையில் உறைபனியின் தாக்கத்தால் மீண்டும் குளிர் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உதகையில் உறைபனியின் தாக்கத்தால் மீண்டும் குளிர் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் புதன்கிழமை அதிகாலையில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ்  2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. 
உதகையில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பனிக்காலம் தொடங்கினாலும் டிசம்பர் மாத இறுதியிலிருந்துதான் உறைபனியின் தாக்கம் தொடங்கியது. இதன் காரணமாக பிற்பகலிலேயே கடும் குளிர் நிலவி வந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் குறைந்து இரவில் தொடங்கி அடுத்த நாள் காலை வரை நீடிக்கிறது. இதன்மூலம் முன்பனிக் காலம் முடிவுக்கு வந்து பின்பனிக் காலம் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி வீசி வந்த காற்றின் திசை தற்போது மாறியுள்ளதால் மாலை நேரங்களில் குளிர் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இருப்பினும் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் குளிர் நிலவினாலும்,  உதகையில் தற்போது அதிகாலை நேரங்களில் கொட்டும் கடுமையான உறைபனியால் காலை நேரங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் காலை 10 மணிக்குப் பின்னரே இயல்பு வாழ்க்கை  தொடங்குகிறது. தற்போது பொங்கல் விடுமுறைக் காலம் என்பதால் உதகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்தக் குளிரை அனுபவிக்கவே அவர்கள் வந்துள்ளதாக கூறுவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை அதிகாலையில் உதகை நகரப் பகுதியில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவிலேயே குறைந்தபட்ச  வெப்பநிலை மைனஸ்  2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதால்,  புறநகர்ப் பகுதிகளிலும்,  வனப் பகுதிகளையொட்டியுள்ள  நீர்நிலைப்  பகுதிகளிலும் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com