குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனைப் பகுதியில் உள்ள முத்திரி எஸ்டேட் கிணற்றில் உயிருடன் இருந்த சிறுத்தைக் குட்டியை வனத் துறையினர் புதன்கிழமை மீட்டு வனப் பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனைப் பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இந் நிலையில் இங்குள்ள முத்திரி எஸ்டேட் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருடன் இருப்பதாக வனத் துறைக்கு எஸ்டேட் கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து குன்னூர் வனச் சரகர் பெரியசாமி தலைமையில் வந்த வனத் துறையினர் 2 மணி நேரம் போராடி சிறுத்தைக் குட்டியை உயிருடன் மீட்டனர். பின் அருகில் இருந்த வனப் பகுதியில் அதை விட்டனர்.
குட்டியைத் தேடி தாய் சிறுத்தை வர வாய்ப்பிருப்பதால் அப்பகுதி பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.