பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் காட்டு யானை வியாழக்கிழமை தாக்கியதில் தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வருவாய் வட்டத்திலுள்ள சேரம்பாடி தனியார் எஸ்டேட் தொழிலாளர் ராஜேந்திரன்(48). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட்டுக்கு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் மறைந்திருந்த காட்டு யானை வழிமறித்து தாக்கியதில் ராஜேந்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த சக தொழிலாளர்கள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.வனத் துறை, காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.