குன்னூர் ராணுவப் பயிற்சிக் கல்லூரி புதிய கமாண்டென்ட்டாக லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ராணுவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரியின் கமாண்டென்ட்டாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் அம்ரிக் சிங் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் மோகன் புதிய கமாண்டன்ட்டாக பொறுப்பேற்றார்.
இந்நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் அம்ரிக் சிங் பங்கேற்று, ராணுவ முறைப்படி புதிய கமாண்டன்ட்டிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
கடந்த 37 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் மோகன், தேசிய பாதுகாப்பு அகாதெமி ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரி தலைமை பொறுப்பாளராகவும், நேபாளத்தில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சியாச்சின் கிளேசியர், 9 ஆவது கார்ப் படையிலும், எல்லைப் பகுதிகளிலும் பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றியுள்ளார்.