குன்னூர் தேயிலை ஏலத்தில் ரூ.5 விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஆன்-லைன் மூலம் ஒவ்வொரு வாரமும் தேயிலைத் தூள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.11 கோடியே 89 லட்சத்துக்கு தேயிலைத் தூள் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத் தூளை ஏலம் எடுத்தனர். மொத்தம் 19 லட்சத்து 4 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 12 லட்சத்து 20 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 84 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 73 சதவீத தேயிலைத் தூள் விற்பனையானது. இதன் அளவு 13 லட்சத்து 62 ஆயிரம் கிலோ ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 89 லட்சம் ஆகும்.
ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத் தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.5 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அதிகபட்ச விலையாக சி.டி.சி. ரக தேயிலைத் தூள் கிலோ ரூ.261க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலைத் தூள் கிலோ ரூ.235க்கும் ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரகத்தின்
சாதாரண வகை கிலோ ரூ.73 இல் இருந்து ரூ.78 வரையிலும், உயர்ந்த ரக தேயிலைத் தூள் கிலோ ரூ.107 இல் இருந்து ரூ.120 வரையிலும் ஏலம் போனது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.72 இல் இருந்து ரூ.77 வரையிலும், உயர்ந்த ரக தேயிலைத் தூள் கிலோ ரூ.108 இல் இருந்து ரூ.118 வரையிலும் ஏலம் போனது.
விற்பனை எண் 27க்கான ஏலம் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்துக்கு மொத்தம் 21 லட்சத்து 95 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு உள்ளதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.