கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 8 பேர் ஆஜரான நிலையில் ஜம்ஷேர் அலி, சதீசன் ஆகியோர் ஆஜராகாததால், அவர்கள் அனைவரையும் வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை புதன்கிழமை உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்ஷேர் அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், வாளையாறு மனோஜ், பிஜின்குட்டி, சதீசன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்கள். ஆனால், சதீசன், ஜம்ஷேர் அலி ஆகியோர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, வடமலை, குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.