பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகைக்கான சான்று பெறுவது தொடர்பாக புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகைக்கான சான்றுகள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின்படி சலுகைகளைப் பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினரில் கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவர்களைத் தவிர பிற இனத்தவரின் மத்திய அரசின் குடிமைப் பணிகள், மத்திய அரசின் பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் பயில 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு வருமானம், சொத்து சான்று பெற சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரை அணுகி விண்ணப்ப படிவத்தினை அளித்து உரிய சான்றினைப் பெற்று பயனடையலாம்.
இதற்கு விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருப்பதோடு, 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். அதேபோல 1,000 சதுர அடிக்கு குறைவாக அடுக்குமாடி குடியிருப்பு உடையவராக இருப்பதோடு, அறிவிக்கை செய்யப்பட்ட நகராட்சிப் பகுதிகளில் 300 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு மனை உடையவராகவும், அறிவிக்கை செய்யப்படாத நகராட்சிப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு மனை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
விவசாயம், வியாபாரம், தொழில் மூலமாக அவரது குடும்பத்தினர் பெறும் முந்தைய ஆண்டின் வருமானம் சான்று கோரும் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.