பசுமைக் குடில் தொழில்நுட்பத்தில் காய்கறி பயிர் செய்ய விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் தண்ணீர் வசதி உடைய இடத்தில் பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யும்போது தரமான காய்கறிகளை பெறுவதுடன், விளைச்சலும் அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் அரசு பசுமைக்குடில் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீட்ரூட், காலி பிளவர், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மட்டும் பயிரிடாமல் கீரை வகைகள், மர நாற்றுகள் உற்பத்தி, ரோஜா போன்ற மலர்களையும் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்ய முடியும்.
மலர் மற்றும் மரக்கன்றுகளை பசுமைக்குடிலில் உற்பத்தி செய்து ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்தால் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
தோட்டக்கலைத் துறை சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா உள்பட 10 இடங்களில் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு விவசாயி 20 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைத்து பயிர் செய்ய வேண்டும். இதற்கு, ரூ. 10 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ. 4 லட்சம் மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
திறந்தவெளித் தோட்டங்களில் பயிரிடுவதைவிட பசுமைக்குடில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக மகசூலை பெற முடியும் என்பதால், விவசாயிகள் முதலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்வதால் நிரந்தர வருமானம் பெறமுடியும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு 0423-2231718 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.