கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் யானை தாக்கியதில் முதியவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவுக்கு உள்பட்ட பாட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (70). இவர், தொழுகைக்காக வீட்டிலிருந்து அருகிலுள்ள மசூதிக்கு செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் நின்றிருந்த யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் சப்தமிட்டு யானையை விரட்டிவிட்டு மொய்தீனை அருகிலுள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே பகுதியில் கடந்த 2 மாதங்களில் 3 பேரைக் காட்டு யானை தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யானை தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத் துறை மற்றும் காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.