நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் அசோக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு உதகை ஊரகக் காவல் ஆய்வாளர் கனகலிங்கம், உதவி ஆய்வாளர்கள் ராஜன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆய்வாளர் கனகலிங்கம் பேசியதாவது:
போதைப் பொருள்களை பயன்படுத்துவதும், போதைப் பொருள்களை பயன்படுத்துவோருடனான நட்பும் வாழ்க்கையை வீணாக்கி விடும். எனவே, மாணவர்கள் தங்களது எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் வாழ போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருப்பதோடு, அவற்றில் சிக்கியவர்களையும் மீட்க முயற்சிக்க வேண்டுமென என்றார்.
அதைத் தொடர்ந்து "போதைப்பொருள் ஒழிப்பு' என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் சுப்பிரமணியம் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் தேவராஜன் நன்றி கூறினார்.