நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
முதல் நாள் நடைபெற்ற தமிழ் முதல் தாள் பாடத் தேர்வில் மொத்தம் 6,797 பேரில் 6,348 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். 449 பேர் தேர்வு எழுதவில்லை. அதேபோல, மலையாளப் பாடத்தில் மொத்தம் 314 பேரில் 302 பேர் தேர்வு எழுதினர். 12 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 401 பேரில் 393 பேர் தேர்வு எழுதினர். 8 பேர் தேர்வுக்கு வரவில்லை. ஹிந்தி பாடத்தில் மொத்தம் 83 பேரில் 79 பேர் தேர்வு எழுதினர். 4 பேர் தேர்வு எழுதவில்லை. அரபி மொழி பாடத்தில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த ஒருவர் தேர்வு எழுதினார்.
தனித் தேர்வர்களில் தமிழ் முதல் தாள் தேர்வில் விண்ணப்பித்திருந்த மொத்தம் 44 பேரில் 33 பேர் தேர்வு எழுதினர். 11 பேர் தேர்வு எழுதவில்லை.
மாற்றுத் திறனாளி மாணவர்களில் சலுகை பெற்ற மொத்தம் 26 மாணவர்கள் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் 1 மணி நேரம் சொல்வதை எழுதுபவர், மொழிப் பாடல் விலக்கு போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதி உள்ளனர்.
மொத்தத்தில் முதல் நாள் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 7,596 பேரில் 7,123 பேர் தேர்வு எழுதி உள்ளனர். 473 பேர் தேர்வு எழுத வரவில்லை.
உதகை காத்தாடி மட்டம் அரசு மேனிலைப் பள்ளியில் மாணவர்கள் தேர்வெழுதுவதை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, போதிய இருப்பிட வசதி ஆகியவை போதுமான அளவில் செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.