உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் 7 நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கியது.
உதகை அருகேயுள்ள மேல்கவ்வட்டி கிராமத்தில் இம்முகாமை கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தொடக்கி வைத்தார். முதல் நாளில் அங்குள்ள கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து தூய்மை இந்தியா விழிப்புணர்வும், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தொடர்ந்து வரும் நாட்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு, மது ஒழிப்பு விழிப்புணர்வு, வாக்களிப்பதன் முக்கியத்துவம், பெண் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவியருக்கென ஆளுமைத் திறன் தொடர்பான கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன. தினந்தோறும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் ஊர் தலைவர் ராமன், கிராம நிர்வாகிகள் பாஸ்கரன், நடராஜன், ராமலிங்கம் ஆகியோருடன் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டக் குழுவின் சார்பில் எபினேசர், விலங்கியல் துறை இணை பேராசிரியர் ஜெயபாலன், உதவி பேராசிரியர் விஜய் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரவி, கண்ணபிரான், பிரவீணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.