நீலகிரி மாவட்டத்திலுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள மேலூர் அரசு தொடக்கப் பள்ளி, தூதூர்மட்டம் அரசு நடுநிலைப் பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர் நகராட்சியிலுள்ள வண்டிசோலை நடுநிலைப் பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலக வாக்குச் சாவடி மையம், ஓட்டுப்பட்டறை சி.எஸ்.ஐ. துவக்கப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களையும் ஆய்வு செய்தார்.