கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய சயன், கோவை மத்திய சிறையில் துன்புறுத்தப்படுவதாக அவரது வழக்குரைஞர் புகார் தெரிவித்தார்.
கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள சயன், மனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ் சாமி ஆகியோரும், ஜாமீனில் வெளியே உள்ள ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், உதயகுமார், சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோரும் ஆஜராகினர்.
அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சயன் உள்ளிட்ட 10 பேரையும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தும், இவ்வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதி வடமலை உத்தரவிட்டார். மேலும் சயன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள 5 பேரையும் ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்ததோடு, இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனவும், வழக்கில் தொடர்புடைய வழக்குரைஞர்கள் மட்டும் ஆஜராகி வாதிடலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். அப்போது சயன் தரப்பு வழக்குரைஞர் ஆனந்த், சயனிடம் பேச அனுமதி கேட்டார். அதற்கு நீதிமன்றத்திற்குள்ளேயே பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வழக்குரைஞர் ஆனந்தன், கோவை மத்திய சிறையில் தன்னைத் துன்புறுத்துவதாக சயன் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பால நந்தகுமாரும் ஆஜரானார்.