கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வழிதவறி வந்த காட்டுப் பூனைக்குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பூனைக் குட்டியைப் பார்த்த அப்பகுதி மக்கள், அதனை சிறுத்தைக் குட்டி என நினைத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் அதனை மீட்டுப் பார்வையிட்டனர். அதில், பிறந்து ஆறு மாதங்களே ஆன காட்டுப் பூனைக் குட்டி என்பதும், வழி தவறி குடியிருப்புப் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது.
இதனைக் கண்டு பயப்படத் தேவையில்லை எனவும், மீட்கப்பட்ட காட்டுப் பூனைக்குட்டியை இரவு நேரத்தில் வனப் பகுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூடலூர் வனச் சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.