நீலகிரி மாவட்டம், கூடலூர் சிவன் மலையில் புதன்கிழமை பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
பௌர்ணமியை முன்னிட்டு, கூடலூர், நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன் மலையில் கிரிவலம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் சிவன்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடி, மலையைச் சுற்றி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்று மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்வர்.
அதைத் தொடர்ந்து, உலக அமைதிக்காகவும், நோயுற்றவர்கள் நலம் பெறவும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் ஆர்.நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.