உதகை காந்தல் குருசடி திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்னகத்தின் கல்வாரி எனப்படும் இத்திருத்தலத்தில் இயேசு பிரான் சுமந்து சென்ற திருச்சிலுவையின் சிறு பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இது சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு பெருவிழாவில் உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் 21 குருக்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை, கலவரங்கள் ஓய்வதற்காகவும், அனைத்து சமுதாயத்தினரிடையே அமைதி நிலவவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குருசடி திருத்தலத்தின் அதிபர் அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் உதகை மறைமாவட்ட முதன்மை குரு ஸ்தனிஸ்லாஸ், மறை மாவட்ட பொருளாளர் செல்வநாதன், திரு இருதய ஆண்டவர் பேராலய பங்குத் தந்தை ஸ்டேனிஸ், திரேசன்னை ஆலய பங்குத் தந்தை பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டுப் பாடல் திருப்பலியைத் தொடர்ந்து மாலையில் தேர் பவனியும், சிறப்பு தேவ நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது.