குன்னூரில் மேற்கத்திய இசை நிகழ்ச்சி: உதகை, மைசூரு இசைக் கலைஞர்கள் பங்கேற்பு
நீலகிரி ஸ்டிரிங்க்ஸ் இசைக் கலைஞர்களும், மைசூரு சேம்ப்ர் ஆஃப் ஆர்கெஸ்டிரா அமைப்பினரும் இணைந்து குன்னூர் கிளப் அரங்கில் மேற்கத்திய இசை நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்தினர்.
உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான இசை பிரதானமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இசைப் பிரியர்களை வசீகரிப்பது மேற்கத்திய இசையேயாகும். மேற்கத்திய இசையைத் தொடாத இசையமைப்பாளர்களே இல்லை எனலாம். அதிலும் மேற்கத்திய இசையை சிம்பொனி இசைக்குழுக்களின் மூலம் குழுவாக வாசிப்பதும், அதை விரும்பி கேட்பதும் இன்றளவிலும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.
இத்தகைய இசை நிகழ்வுகள் மேலை நாடுகளில் பொதுவான நிகழ்வுகளாக இருந்தாலும் மலை மாவட்டமான நீலகிரியில் முதன்முறையாக குன்னூரில் மேற்கத்திய இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் இசை மேதைகளான மொஸார்ட், பீதோவன் போன்றோரின் இசையை வயலின், வயோலா, டபுள் பேஸ் உள்ளிட்ட இசைக் கருவிகளின் மூலம் சுமார் 2 மணி நேரம் இசை மழையாக பொழிந்தனர். சுமார் 20 வயதிலிருந்து 70 வயது வரையிலான 30 இசைக் கலைஞர்கள் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியைக் காண குன்னூர் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இசைப் பிரியர்கள் வந்திருந்தனர்.
என்னதான் நவீன மின்னணு இசைக் கருவிகள் தற்போது நடைமுறைக்கு வந்திருந்தாலும் இந்த கலைஞர்கள்
முதன்முறையாக குன்னூரில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஒப்பாகாது என இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இசைப்பிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
உதகையில் தங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கோடை சீசனின்போது அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் தங்களால் மேலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.