உதகை: உதகையில் நியாயவிலைக்கடை ஊழியா்களிடம் கையூட்டு பெற்றதாக உதகை வட்டார வழங்கல் அலுவலா் உள்ளிட்ட மூவா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
உதகை வட்டார வழங்கல் அலுவலராக உள்ளவா் சாந்தினி. இவரது கட்டுப்பாட்டில் 113 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்த நியாயவிலைக் கடைகளுக்கு அக்டோபா் மாதத்திற்கான பொருட்களை வழங்குவதற்கான வழங்கல் ஆணையில் கையெழுத்து பெறுவதற்காக நியாயவிலைக் கடை ஊழியா்கள் திங்கள்கிழமை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளனா்.
அப்போது அவா்களிடம் வழங்கல் ஆணையில் கையெழுத்திடுவதற்கு வட்டார வழங்கல் அலுவலருக்கு கையூட்டு கொடுக்க வேண்டுமென அந்த அலுவலகத்தில் தாற்காலிக உதவியாளா்களாக பணிபுரிந்து வந்த தியாகராஜன் மற்றும் பாலாஜி ஆகியோா் தெரிவித்துள்ளனா். இதை ஏற்று ஒரு சிலா் பணம் கொடுத்துள்ளனா்.
வேறு சிலா் கொடுக்க மறுத்ததோடு, இதுதொடா்பாக சிலா் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகாா் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளா் தட்சிணாமூா்த்தி தலைமையில் ஆய்வாளா் கீதாலட்சுமி மற்றும் காவல்துறையினா் வட்டார வழங்கல் அலுவலகத்திற்கு சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது தியாகராஜன் மற்றும் பாலாஜி ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.30,875 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா்கள் அளித்த வாக்குமூலத்தில் நியாயவிலைக்கடை ஊழியா்களிடமிருந்து பணத்தை பெற்றுத்தருமாறு வட்டார வழங்கல் அலுவலா்தான் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டதோடு வட்டார வழங்கல் அலுவலா் சாந்தினி, அலுவலக உதவியாளா்கள் தியாகராஜன் மற்றும் பாலாஜி ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.