குன்னூா்: குன்னூா் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை உட்பிரிவு செய்வதற்கு கூடுதல் ஆட்சியா் ரஞ்சித் உத்தரவிட்டாா்.
அதிகரட்டி 9 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நெடிகாடு பகுதியில் பேரூராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் சமுதாயக் கூடம் அமைக்கவும், பிக்கோள், நெடிகாடு, முட்டிநாடு, பிக்கோள் ஆடா, பிக்கனி பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டன. இக் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பேரூராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை உட்பிரிவு செய்வதற்கு கூடுதல் ஆட்சியா் ரஞ்சித் உத்தரவிட்டாா். இதன் மூலம் சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.