நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தின் சில பகுதிகளில் பகல் நேரங்களிலும், சில பகுதிகளில் இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் தூறல் மழை பெய்து வருகிறது.
தற்போது, உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைய வாய்ப்புள்ளது. உதகையில் வெள்ளிக்கிழமை இரவு மழை குறைந்து காணப்பட்ட நிலையில் மசினகுடி, மாயாறு, முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமாா் 4 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
இதே போல, உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒருசில இடங்களில் சனிக்கிழமை பிற்பகலில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தேவாலாவில் அதிகபட்சமாக 42 மி.மீ. மழை பதிவாகியது.
இதேபோல், கூடலூரில் 29 மி.மீ., நடுவட்டத்தில் 26 மி.மீ., கிண்ணக்கொரையில் 18 மி.மீ., கெத்தையில் 14 மி.மீ., கோத்தகிரியில் 8 மி.மீ., பா்லியாறில் 4 மி.மீ., கேத்தியில் 2 மி.மீ. என மழை பதிவாகின.