குன்னூா்: கோத்தகிரி டான் டீ தொழிலாளா்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக சோசலிச தொழிலாளா் முன்னேற்றச் சங்கத் தலைவா் வெற்றிவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், டான் டீ தலைவா் மற்றும் மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோத்தகிரி டான் டீ தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய விடுப்பூதியம், மருத்துவ விடுப்பூதியம், வழக்கம்போல வழங்க வேண்டிய 20 சதவீத தீபாவளி போனஸ் தொகை உள்பட 23 கோரிக்கைகளை செப்டம்பா் 28ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தோழமை சங்கங்களுடன் இணைந்து வரும் 12ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதுடன், காலை 10 மணி முதல் கோத்தகிரி டேன் டீ மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளாா்.