நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பசுந்தேயிலை விளைச்சல் வெகுவாக குறைந்தது. மேலும் பல பகுதிகளில் பனி மூட்டமும் நிலவியதால் மேகம் சூழ்ந்த பகுதிகளில் தேயிலைச் செடிகளில் இலைகள் கருகியதோடு கொழுந்துகள் செடியில் இருந்து விழுந்ததால் தேயிலை வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
ஏற்கெனவே பசுந்தேயிலைக்கு குறைந்த விலை கிடைத்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தற்போது தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தேயிலைச் செடிகளில் இலைகள் கருகியும், உதிர்ந்தும் வருவது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:
தேயிலைக்குத் தேவையான உரம், மருந்துகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் பசுந்தேயிலைக்கு குறைந்த விலையே கிடைத்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர் மழையால் தேயிலை மகசூல் வெகுவாக குறைந்துவிட்டதால் நஷ்டம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் உள்ள தேயிலைச் செடிகளில் பசுந்தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேயிலை வாரியம் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.