கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பகுதியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்டார். மூன்று குழந்தைகளும் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலிகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரையில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி வனிதா (34). தம்பதி இடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 4ஆம் தேதி இரவு தனது மூன்று குழந்தைகளான அபித்ஷா (13), அனுஸ்ரீ (10) , அக்ஷதா (8) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு வனிதாவும் குடித்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நால்வரையும் கோவைக்கு அனுப்பியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் வனிதா உயிரிழந்தார். குழந்தைகள் மூவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.