கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு புன்னம்புழா ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமுண்ணியின் மகன் ராஜேஷ் (29). இவர், தனது தோட்டத்தில் விளைந்த வாழைத்தார்களை நண்பர்களுடன் கூடலூரில் விற்பனை செய்ய செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். விற்பனை முடிந்து பணத்துடன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, பாண்டியாற்றின் கரையோரம் திடீரென மண்திட்டு இடிந்துள்ளது. அந்த மண் சரிவில் சிக்கிய ராஜேஷ் ஆற்றுக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரைக் கண்டறிய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் ராஜேஷை தேடும் பணியில் புதன்கிழமை காலை மீண்டும் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. தொடர் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.