உதகை மஞ்சனக் கொரை பகுதியில் ஒரு புதரிலிருந்து தொப்புள் கொடியுடன் வீசப்பட்டிருந்த ஆண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உதகை, ராஜ்பவன் பகுதியைச் சேர்ந்தவர் சகாயமேரி. இவர் மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்குவதற்காக வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கு புதர் மண்டிய பகுதியில் இருந்து
குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது புதரில் தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சிசு கிடந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக சகாயமேரி அந்த சிசுவைத் தூக்கிக் கொண்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிசு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.