கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி தம்பதி வியாழக்கிழமை காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், காப்பிக்காடு பழங்குடி காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் புளியம்பாறை பகுதியிலிருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை நடந்து சென்றுகொண்டிந்தனர். அப்போது திடீரென புதரிலிருந்து வந்த காட்டு யானை குமாரை இழுத்து வீசியுள்ளது. கணவரை யானை தாக்குவதைப் பார்த்து மீனா அலறியுள்ளார்.
அப்போது மீனாவையும் யானை விரட்டியுள்ளது.
யானையிடமிருந்து தப்பி ஓடிக் கீழே விழுந்ததில் மீனாவும் காயமடைந்தார். மீனாவின் அலறல் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து யானையை விரட்டினர். பின்னர் இருவரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.