கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில் அதிக பரப்பளவில் விவசாயிகள் தேயிலைப் பயிரிட்டு வருகின்றனர். தோட்ட பராமரிப்பு செலவு, உரம் உள்ளிட்ட இடு பொருள்களின் விலையேற்றம், தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்ற செலவினங்களை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை போதுமானதாக இல்லை. எனினும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஓரளவு ஆறுதலாக உள்ளது. நடப்பு ஆண்டு அவ்வபோது மழை பெய்த நிலையில் தேயிலைத் தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் தேயிலைத் தோட்டங்களில் மகசூல் அதிகரித்துக் காணப்படுகிறது. அதேநேரத்தில் அறுவடைக்குத் தயாரான பசுந்தேயிலையைப் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு கூடுதலாக கூலி கொடுத்து பசுந்தேயிலையைப் பறிக்கும் பணியை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.